ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பானின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக அரச இராப்போசன விருந்தொன்றினையும் வழங்கவுள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது தொடர்பான பரஸ்பர விடயங்கள் குறித்து இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான யென் கடன் உடன்படிக்கையொன்று இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜப்பான் வர்த்தகம், கைத்தொழில் சம்மேளனம், டோக்கியோ வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இணை அனுசரணை வழங்கப்படவுள்ள ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜப்பானிலுள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.