வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.

இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல் வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை கீழ் இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.