உலகில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் 2018ஆம் ஆண்டுப் பட்டியலில், இலங்கைக்கு, 116ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடம், 120ஆவது இடத்தைப் பிடித்திருந்த இலங்கை, நான்கு படிகள் முன்னேறி, 116ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை, பின்லாந்தும் இரண்டாவது இடத்தை, நோர்வேயும் பிடித்துள்ளன. இலங்கையின் அயல் நாடான இந்தியாவுக்கு, 133ஆவது இடம் கிட்டியுள்ளது. ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது.வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது.

பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன. மக்களின் கனவு பிரதேசமாக திகழ்கிற அமெரிக்கா, மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின்னுக்குப் போய் 18ஆவது இடத்தில் உள்ளது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டி. உள்நாட்டுப்போரால் சிரியாதான் மிகவும் மோசமான நாடு என எல்லோரும் நினைத்து இருக்கும் வேளையில் அந்த நாட்டை விட மோசமான நாடுகள் என்று கூறத்தக்கவிதத்தில் ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.