கண்ணீர் அஞ்சலிகள்

எமது தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அன்னை திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் பிரிவினை மிகுந்த கவலைகளுடன் ஏற்றுக்கொண்டு அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களினதும் அவரது புத்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தனினதும் பண்பட்ட, மக்கள் நலன் சார்ந்த, எளிமையான தலைமைத்துவங்களின் பின்னால் சரஸ்வதி அம்மாவின் செயற்பாடுகள் உறுதியான ஆதாரமாக அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.

இரண்டு மகத்தான மக்கள் பிரதிநிதிகளை பாசத்துடனும், பண்புடனும், பரிவுடனும் வழிநடாத்திய சரஸ்வதி அம்மா அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே வாஞ்சையோடும், உரிமையோடும் தனது மகனின் கட்சித் தோழர்களையும் அரவணைக்கத் தவறியதில்லை.
தனது தாய் மண்ணைவிட்டு விலகியிருக்க விரும்பாத எமது அன்புத் தாயாரான சரஸ்வதி அம்மா, கட்சி மற்றும் இயக்க பேதமின்றி புலிகளின் தலைவர் முதல் சாதாரண போராளிகள் வரை அனைவரையும் பாராட்டி சீராட்டி ஆதரவு கொடுத்தவராவார்.

எமது தலைவர் மட்டுமல்ல அவரது வழி செல்லும் நாம் அனைவரும்கூட ஒரு தாயை இழந்த உணர்வுகளுடன் அவரது நினைவுகளை சுமக்கத் தயாராகின்றோம்.

அந்த அம்மாவின் கனவுகள், ஆசைகள் மெய்ப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமுமாகும்.

அன்னையின் பிரிவால் வாடும் உறவுகளுடன் துயர் பகிரும்

– கழகத் தோழர்களும், கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும்,
– தலைமைச்செயலகம்

– தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
– ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)