யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் இந்த உதவித் திட்டங்களை செயற்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் சென்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பெண் தலைமை குடும்பங்களை சந்தித்து சமுக பொருளாதார வாழ்க்கையை மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் சென்ற நிதி அமைச்சர் அங்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடல்களில் மத்திய வங்கியின் ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.