வேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பட்டதாரிகளை அபிவிருத்தி பணியாளர்களாக இணைத்துக்கொள்வதுடன், அவர்களுக்கு 2 வருட பயிற்சியும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பயிற்சி காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவுள்ளதுடன், இவர்களை பிரதேசசெயலகங்களில் சேவைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடுபூராகவும், மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜுன் மாதம் தொடக்கம் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.