மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வேனும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வேன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வேனில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பொலநறுவையில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி வந்த டிப்பர் வாகனம் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன்மீது மோதியுள்ளது.

இதன்போது டிப்பரில் மோதுண்ட வேன் மின்கம்பதிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இராஜரெட்ணம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.