கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து புகலிடம் கோரி வந்த யாழ் மாவட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற புனர்நிர்மாண, சிறைச்சாலைகள் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மீள்குடியேறயுள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ் மாவட்ட செயலக மேலதிக செயலாளர் காணி எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்றத்திற்காக புதிய வீட்டுத்திட்டங்களை வழங்க முன்வந்துள்ளனர். இதற்காக காணியில்லாத 25 குடும்பங்களுக்கு காணியுடன் சேர்ந்த புதிய வீட்டுத்திட்டத்தினை முதற்கட்டமாக உரும்பிராய் வழங்க குறித்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இவ் திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

1110 குடும்பங்கள் தற்போது மீள்குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். அவற்றில் முதற்கட்டமாக 80 வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவற்றிக்கான வீடமைப்பு அதிகார சபை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக இவ் வீட்டுத்திட்டங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.