யாழ். சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையை வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்.

சாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மூன்று வீடுகளுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு மற்றும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டது. அதனால் அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.

அத்துடன், கொக்குவில் முதலி கோவிலடியில் ஆவா கும்பலைச் சேர்ந்த ஒருவரால் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலை தொடர்ந்தால் அடங்கி இருந்த வாள்வெட்டுக் கும்பல்கள் மீளவும் அடாவடிகளில் ஈடுபடுமென வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் யாழ் பிராந்திய பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.