நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 8276 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். இன்று அதிகாலை 04.00 மணி முதல் காலை 08.00 மணி வரை நாடளாவிய ரீதியில் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 270 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 938 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுள் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த 02 பேரும் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 733 பேரும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 54 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த விஷேட சுற்றிவளைப்பின் போது ஹெரோய்ன் மற்றும் வேறு விதமான போதைவஸ்துக்களை வைத்திருந்த 633 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.