கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தற்போது தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் தெளிவுப்படுத்தே போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,தற்போது தேசிய அரசாங்கம் பிரயோசனமற்ற விதத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் நாட்டில் எவ்வித மாற்றங்களும் தோற்றம் பெறாது. கடந்த மூன்று வருடகாலமாக ஏற்படுத்த முடியாத மாற்றத்தினையா தேசிய அரசாங்கம் குறுகிய காலத்தினுள் ஏற்படுத்த போகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டனர்.

இதன் போது பிரதமர் தமக்கு ஆதரவு அளித்தால் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிய அமைச்சுக்களை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார். அதன் நன்றிக்கடனையே தற்போது அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக செலுத்தி வருகின்றார்.

புதிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் எவ்வித எதிர்ப்புக்களையும் தெரிவிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முறையற்ற விடயத்திற்கும் நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியினர் முன்னாள் சபாநாயக்கர் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலைப்படுத்த ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை கூட்டு எதிரணியினர் சார்பில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக பலர் பலவிதமாக தமது தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

தேர்தலில் வெற்றிப்பெற கூடியவரை மாத்திரமே வேட்பாளராக போட்டியிட செய்ய முடியும். இதற்கமைய அனைவர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமை கூட்டு எதிரணியினரின் வெற்றி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உறுதியாக்கப்பட்டு விட்டது.