சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று காலை 04.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் 02 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன. இன்று காலை 06.10 மணிக்கு பாகிஸ்தானின் லா{ஹரில் இருந்து வருகை தர இருந்த விமானம் காலை 09.45 மணிக்கும், அந்த நேரத்திற்கு க்வன்சுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் இன்று பகல் 01.20 மணி ஆகும் என்று கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இன்று காலை 07.35 மணிக்கு கொச்சி நோக்கி புறப்பட இருந்த விமானம் இன்று பகல் 12.30 மணி வரை தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 08.36 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட இருந்த விமானம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் காரணமாக நேற்றைய தினம் முதல் விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இருந்து வருகை தந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அந்த விமானம் கொச்சு நகரில் தரையிறக்க நேரிட்டதாலும், குவைட்டில் இருந்த வருகை தந்த விமானம் ஒன்று புழுதிப் புயலை எதிர்கொண்டதால் பொறியியலாளரின் உதவியை பெற வேண்டி ஏற்பட்டதாலும், மேலும் இரண்டு விமானங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாலும் விமானப் பயணம் தாமதமானதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.