இறுதி யுத்தத்தில் தமது உயிர்நீத்த முப்படையினரை கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு யாழ். பலாலி படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்க தலைவி அனேமா பொன்சேகா மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இராணுவவீரர்களின் நினைவுத்தூபிக்கு முப்படையினரால் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பிரதம அதிதிகளினால் நினைவுத் தூபிக்கு மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சர்வ மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன் முப்படைவீரர்கள் நினைவாக நூல் மற்றும் கொடி என்பனவும் வெளியிடப்பட்டது.

இதில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, வடமாகாண பிரதம செயலர் ஏ.பத்தினாதன், யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன், சர்வமத தலைவர்கள், யாழ். மன்னார், வவுனியா, கிளிநொச்சி அரச அதிபர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.