தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எம்.கே. காரியவசம் கூறினார். எவ்வாறாயினும் இதுவரை அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எம்.கே. காரியவசம் கூறினார்.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காமையின் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள உரிய நேரத்திற்கு மாத்திரம் வேலைசெய்யும் போராட்டம் தொடர்கின்றது.