மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய கால்நடை வளர்ப்பாளரான 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளில் கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது குளப்பகுதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.