நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுகாலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த கட்டண அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வர உள்ளதாக அவர் கூறினார். அதேநேரம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததுடன், 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் கோரியிருந்தனர். அதன்படி குறித்த கட்டண திருத்த யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.