இலங்கை எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்துக்கு தயாராவதற்கும், உடனடியாக செயற்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மூன்று வருட காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் வெள்ளம், கடும்காற்று, வறட்சி முதலான இயற்கை அனர்த்தங்கள் எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய காலநிலை மாற்ற தரவுகளுக்கு அமைவாக இலங்கை இந்த பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக பொதுமக்களின் வீடு பொருளாதாரம் சமூக நடவடிக்கைகள் சீர்குலைவதாக உலக உணவு வேலைத்திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி, காலி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தறை, அனுராதபுரம், களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களின் முன்னெச்சரிக்கைக்கான நடவடிக்கைகளை அதிகரித்தல், சிரமங்களை குறைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவும் வகையிலேயே உலக உணவு வேலைத்திட்டம் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.