கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 62 வயதான, கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கோப்பாய் சந்தி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.