மத்திய மாகாணத்திலும் நீடித்துவரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக ஹட்டன் வழியினூடாக அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக மாலை வேளையிலேயே சிவனொளிபாத மலைநோக்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நீடித்துவரும் சீரற்ற காலநிலையால், இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தானது. மலைக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துவிட்டு காலை வேளையிலேயே மலை ஏறுமாறும், மாலைக்குள் மலையிலிருந்து கீழிறங்கிவிட வேண்டுமென்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.