மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட சாரதிகள், அனைத்து வேலையாட்கள், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.

இந்த எதிர்ப்புப் போராட்டம், ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையைக் கண்டித்து, நகர சபை முன்றலில் நடத்தப்பட்டது. இதனால் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள் நடைபெறவில்லை. பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை, பத்து மாத காலங்களாக இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு, தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து, இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது நகர சபையின் முதல்வர் ஐ. அப்துல் வாசித் மற்றும் உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் ஆகியோர் அவ்விடத்துக்கு வருகைதந்து, ஊழியர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். அத்துடன், மகஜர் ஒன்றையும் கையேற்றனர்.

செயலாளரது நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதமளித்ததுடன், பிரதேசத்தின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு முதல்வர் கேட்டுக்கொண்டபோதிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடவில்லை. இவ்விடயம் குறித்து, ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், இக்குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 10மாத இடர்கடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின் தொடர் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் கூறினார். மேலும், நகர சபையில் நிலவும் நிதிப்பற்றாக்குறையால் கொடுப்பனவுகளையும் சீருடைகளையும் உரிய காலத்தில் வழங்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.