கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் நா.நகுலராஜா நேற்று தெரிவித்துள்ளார்.

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும், மற்றும் வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக சங்கத் தலைவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்குள் மத்தியில் போதுமான சேவையினை மீள்குடியேற்றம் காலம் தொடக்கம் வழங்கி வருகின்றார்கள். வலைப்பாடு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களை கொண்ட கிராமம்.

இந்த கிராமத்திற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வவுனியாவிலிருந்து நேரடியாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருப்பது கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர்களை பெரிதும் பாதிக்கும் செயற்பாடாகும்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் உரிமை மாற்றம் செய்யப்பட்ட அனைத்து தற்காலிக வழியனுமதிபத்திர உரிமையாளர்களையும் தற்போது உருவாக்கப்பட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஒரு இலட்சம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளமையினையும் கண்டித்து நாளை சனிக்கிழமை கிளிநொச்சியில் இருந்து இடம்பெறுகின்ற வெளியூர் மற்றும் உள்ளுர் தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக நா.நகுலராஜா மேலும் தெரிவித்துள்ளார்.