மன்னார் நகர நுழைவாயில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மேலும் சில மனித எலும்புத் துண்டுகளும் மனித பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

விற்பனை நிலைய வளாகத்திலும் மன்னார் பொது மயானத்துக்குப் பின்பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணிலுமே, இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ் ராஜா முன்னிலையில் ஆரம்பமான இந்த அகழ்வுப் பணியின் போது, விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், காணாமற் போனவர்களின் குடும்பங்கள் சார்பான சட்டத்தரணிகள் வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் திருமதி ரணித்தா ஞானராஜ் ஆகியோரும் விசேட தடவியல் நிபுணத்துவப் பொலிஸார்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள், தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். விற்பனை நிலைய வளாகத்தில், சுமார் 7 அடி ஆழத்தில் பரவளாகக் காணப்பட்ட மனித எலும்புத் துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டதோடு, சேரித்து வைக்கப்பட்ட மண்ணிலிருந்தும், எலும்புத் துண்டுகள் மற்றும் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.