மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது.

´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் குறித்த அகழ்வு பணிகள் குறித்த இரு இடத்திலும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகியது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,

களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் இரு இடங்களிலும் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அகழ்வகளின் போது மனித எலும்புத்துண்டுகள், பற்கள் என மனித எச்சங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.