ரயில்வே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மேலதிக சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபை வழமையாக 5,400 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது.

பணி பகிஷ்கரிப்பு காரணமாக இத்தொகையை 5,700ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.ரயில் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இலங்கை போக்குவரத்து சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விசேடமாக ரயில் சேவை பெரும் எண்ணிக்கையில் இடம் பெரும் மாகாணங்களை இலக்காக கொண்டு சம்பந்தப்பட்ட டிப்போக்கள் மூலம் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பஸ் சேவைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் குறித்து ரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ரயில் பெட்டிகளிற்கும் இயந்திரங்களிற்கும் சேதமேற்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின் சொத்துக்களிற்கும் பொதுச்சொத்துக்களிற்கும் சேதம் ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார். ரயில்வே திணைக்களம் இது தொடர்பில் விசேட உள்ளக விசாரணையை மேற்கொள்ளவுள்ளது. பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் காரணமாக பல ரயில்சேவைகள் தாமதமடைந்துள்ளது எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.