சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம்´ என சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.அத்துடன் அவர் தெரிவித்திருந்து சர்ச்சையான கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) அவரை அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

அந்த கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்துள்ளார்.

இதேவேளை ‘பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது’ என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் வெ ளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்