எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியாக 2 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் வாக்காளர்கள் தமது பெயர்களை இரு முறை பதிவு செய்வதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய புதிய வாக்காளர் பட்டியலை அரசாங்க வர்த்தமானியில் ஒக்டோபர் 31ஆம் திகதி பிரசுரிக்க திட்டமிட்டிருந்தது. இருப்பினும், மாகாண சபை தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதனால், புதிய தேர்தல் வாக்காளர் பட்டியல் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டபடி இடம்பெற்றால், இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தல்களை டிசம்பர் 22 அல்லது 29 ஆகிய இரண்டு திகதிகளில் மட்டுமே நடத்த முடியும். 22ஆம் திகதி பௌர்ணமி தினமாகையால், தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய ஞாயிற்றுக் கிழமை பௌர்ணமி தினத்தில் தேர்தல்கள் நடத்த முடியாது.

இது தவிர, டிசெம்பர் 31ஆம் திகதி நிதி ஆண்டு நிறைவிற்கு வருவதன் காரணமாக அந்த காலப்பகுதியில், அரச அதிகாரிகள் அதிக வேலைப்பழுவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, புதிய வாக்காளர் பட்டியலில் இந்த முறை ஆபிரிக்க மற்றும் போத்துக்கீச வம்சாவளிகளும் இணைக்கப்படுவதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.