யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்த துணிகர கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளது. யாழ். மற்றும் நல்லூர் பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்ட கும்பல், கோண்டாவில் பகுதியில் வீதியில் சென்ற இருவரின் தங்க ஆபரணங்களையும் அறுத்து சென்றுள்ளது. குறித்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.