தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35ஆவது ஆண்டு நிறைவைக் நினைவுகூறும் தமிழர்களுடன் தானும் இணைந்துகொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். கறுப்பு ஜூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது. கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது. ஆயுத மோதல்களின் விளைவாக, பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது’ எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.