எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் சிரேஷ்ட அரச சட்டமா அதிபர் வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்கை செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதுடன் அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கொண்ட நீதிபதி இந்த வழக்கில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை அடுத்த வழக்கு விசாரணை வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தவறு என்பதால் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ மீதும் ஊழல் குற்றச்சாட்டு சமத்தப்பட்டுள்ளதுடன், வழக்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.