நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமானால் நாட்டில் வாழும் அனைவருடைய பன்மைத்துவ அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 10 ஆவது தேசிய மதங்களுக்கிடையிலான மாநாட்டில் அவர் இக் கருத்துக்களை வெளியிட்டார்.