கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரத கடவையில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மற்றைய இளைஞர் சீக்கியன் சஞ்சீவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணியம்தோட்டம் பகுதியில் இருந்து நெளுக்குளம் வீதியை நோக்கி, தலைக்கவசம் அணியாது, ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்துள்ளனர்.

இந்த வேளையில், புகையிரதம் வந்துகொண்டிருந்த போது, சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. சுமார் 10 மீற்றர் தூரத்தில் இருந்து வேகத்தினை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், அதி வேகத்தில் வந்தமையினால், வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமையினால், புகையிரதத்துடன் மோதியுள்ளனர். மோதிய வேகத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததுடன், கையடக்கத் தொலைபேசி மற்றும் வாகன சாவி என்பவற்றை சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டனர். இந்த புகையிரத கடவையில், சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு கடவை வேலி போடப்படவில்லை. இந்தப் பகுதியில் இவ்வாறு பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தைப் பார்வையிட்ட அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலும், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.