தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, புத்திஜீவிகள் சபையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்”, அடுத்த மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்தக் கலந்துரையாடல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் புதன்கிழமை (01) நடைபெறவுள்ளது. இலங்கை சுமித்ரயோ நிறுவனம், இதனை ஏற்பாடு செய்துள்ளது. தற்காலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமது அமைப்பு, திறந்த சித்திரப் போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதென, அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.தற்கொலையைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே, சித்திரப் போட்டியின் தொனிப்பொருளாகும். மன உளைச்சல், மனநோய் ஆகியன, தற்கொலைக்கு முக்கிய காரணமாகும் என அந்த அமைப்புத் தெரிவிக்கின்றது. தற்கொலை முயற்சியைத் தடுப்பது தொடர்பான தகவல்கள் மற்றும் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில், 2003ஆம் ஆண்டில், தற்கொலையை தடுக்கும் சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு சுமார் 4,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையில் வருடம்தோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைத்து வருவதை காணக்கூடியதாக உள்ளதென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்கொலை எண்ணங்கள் கொண்டோருக்கான நிறுவனமாகச் செயற்படும் சுமித்ரயோவை, அனைவரும் தொடர்புகொள்ள முடியும்.

60பி, ஹோர்ட்டன் பிளேஸ், கொழும்பு 7 என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்திலோ அல்லது 011-2683981, 011-2683555 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ அல்லது sumithra@sumithrayo.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும். இந்நிறுவனத்தின் சேவைகளை, ஆண்டின் 365 நாட்களும், காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.