அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேரமன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. 378 அடி (115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது ஹவாய் தீவிலுள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.

ஹவாயில் தரித்திருக்கும், ‘யு.எஸ்.சி.ஜி ஷேரமன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.