உத்தியோகப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கோருவதற்கான உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்துக்கொண்டு அதே கட்சியை சேர்ந்தவர்கள் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக இருக்க முடியாது.
இதற்கேற்றவகையிலேயே பொது எதிரணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினர் கோரி வருகின்றனர்.இதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் அவர்கள் கையளித்துள்ளனர். பொது எதிரணியினரான தம்மிடம் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொது எதிரணியினர் வாதிட்டுவருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது. பொது எதிரணியினரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியாது. இதனால்தான் பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் வந்திருக்கின்றார்.
பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான செயற்பாடாகவே உள்ளது. எனவே இந்த விடயத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமானதாகும் என்றார்.