அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவை விட, 215 சதவீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு அதிகரிப்பானது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அமுலுக்குவருமெனவும் இந்த மாதம் நிலைவைத்தொகையுடன் கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு, 54,285 ரூபாவிலிருந்து 120,000 ரூபாவாகவும், பிரதி அமைச்சருக்கான கொடுப்பனவு, 63,500 ரூபாவிலிருந்து 135,000 ரூபாவாகவும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள், 65,000 ரூபாவிலிருந்து 140,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவர், நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.