மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மன்னாரில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக சீரான மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தினமும் சில மணி நேரம் அல்லது நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமையாகி உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த இந்த பேரணியானது மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்பமாகி மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. இந்த பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம், சர்வமத தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,

சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்ததுடன் பேரணியின் இறுதியில் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் மன்னார் பிரஜைகள் குழுவினரால் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மின் பொறியலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.