யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர் விக்டோறியா வீதியில் வெளி மாவட்டத்தவர்களுக்கென கொடுக்கும் விடுதியிலேயே நேற்று இந்தச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வருகை தந்தவர்கள், விக்டோறியா வீதியில் உள்ள அறை ஒன்றில் தங்கியபோது, அந்த விடுதியின் உரிமையாளர், இரவில் நகைகள் களவு போய்விடும், பத்திரமாக கழற்றி வைத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பின்னர், தங்கியவர்கள், நகைகளைக் கழற்றி அறையில் வைத்துவிட்டு நித்திரை கொண்ட வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலையில் எழும்பிப் பார்த்தால், நகைகள் மற்றும் பணத்தினைக் காணவில்லை என்றும், அந்த நேரம், அந்தப் பகுதியில் இருந்த அறை ஒன்றில் பல மருந்து வகைகள் காணப்பட்டதாகவும், அந்த மருந்து வகைகள் என்ன என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர், விடுதி உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.