யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தை மறுசீரமைத்து மீள இயக்கும் பணிகள் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேல் மயிலிட்டி துறைமுகம் பங்களிப்பு செய்திருந்தது. இந்நிலையில், யுத்தம் காரணமாக செயழிலந்த இந்தத் துறைமுகத்தை மீளச் செயற்படுத்தும் பணிகள் 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டிலிருந்து 40கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டு இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடற்றொழில், நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன்பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன், எஸ்.சரவணபவான், பிரதி அமைச்சர்கள் காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், வட மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், 2009ம் ஆண்டிலிருந்து இன்றுவரையான காலப் பகுதியில் 88 வீதமான காணிகள் மக்களுடைய பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளன.

12 வீதமான காணிகள் விடுவிக்கப்பட உள்ளன. கடந்த 3 வருடங்களாக இந்நாட்டிலே தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளோம். அது போன்று மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நாங்கள் பெரும் தொகையான பணத்தினை ஒதுக்கியுள்ளோம்.

அதேபோன்று இவ் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும் நாங்கள் குறித்த மாகாண சபைகளுக்கு மிக கூடிய தொகையினை ஒதுக்கியுள்ளோம். இருப்பினும் அபிவிருத்திகளின் வேகம் போதாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகின்றோம். என்னை போல், எந்த ஒரு ஜனாதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து சென்றது இல்லை. நான் 3 மாதத்திற்கு ஒரு தடவை வந்து செல்கிறேன்.

மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவற்றிக்கான நிவராணங்களை அறிந்து கொள்ளுவதற்காக நான் இங்கு வருகின்றேன். இங்கு 2009 ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 88 வீதமான காணிகள் மக்களுடைய பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 வீதமான காணிகள் விடுவிக்கப்பட உள்ளது. எங்களுடைய நாடு தீவகப் பகுதியை மையமாக கொண்டு காணப்படுகின்றது. அதற்கு இணைவாக போதைப் பொருட்களும் காணப்படுகின்றது. இவ்வாறான போதைப் பொருட்களை தடுப்பதற்கு நாங்கள் முற்றாக குரல் கொடுக்கிறோம். அதிலிருந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை முற்றாக விடுவிக்க வேண்டும்.

அதற்க பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருட்கள் சம்பந்தமான விடயத்தில் நீதிமன்றத்தால் கூற்றவாளியாக இனம் காணப்பட்டால் மரண தண்டணை வழங்கப்படும் என நான் கூறியுள்ளேன்.

நான் நினைக்கவில்லை இவ்வாறான பிரச்சினைகள் 24 மணித்தியாலத்தில் இல்லாது ஒழிக்கப்படும் என்று, இது 5 வருடங்கள் அல்லது 10 வருடங்களில் தான் இல்லாது ஒழியும். எனவே அனைவரும் ஒன்றினைந்து நாட்டின் பொருளாதார கொள்கைக்கு இவ்வாறான விடையத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டினை வேறு ஒரு பாதைக்காக பயணிக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.