வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாதென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கடிதம் மூலம் கோரியிருந்தார்.எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி செயலணியில் படையினருடன் இணைந்து செயற்படுவதானது அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என வடமாகாண முதலமைச்சர் மீண்டும் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகமனதாகபங்கேற்கும் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இவ்விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறிக்கொண்டி அச்செயலணியில் நேரடியாக பங்கேற்பதன் மூலம் குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளைக் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.

அத்துடன் இச்செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றோம் என்றார்.