(கே.குமணன்)-
சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வடகிழக்கு தமிழ் மண்ணின் முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும் நேர்ககில் செயற்படுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று மகாவலி திட்டத்தினூடான நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாடு சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் சிங்கள அரசியல் தலைமைகள் மிகத் தெளிவான கொள்கையுடன் வட கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை, முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்தது. சுதந்திரம் அடைந்தவுடன் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டு அது இன்றுவரை 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த வெலிஓயா திட்டம் மூலம் எங்கள் தாயக பூமியை இரண்டு கூறாக்கிவிடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

இந்தப் பேரணியிலுள்ள மக்களை கண்டால் அவர்கள் நினைப்பினை மாற்றிக்கொள்வார்கள். இவ்வளவு பெருந்திரளான மக்கள் எங்கள் நிலங்களை பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாக கூறுகின்றார்கள் என்பதை அரசிற்கு மாத்திரம் அல்ல உலகிற்கும் காட்டியுள்ளோம்.

இதனை இந்த அரசு உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும் என்ற இந்த அமைப்பின் கோரிக்கையுடன் நாங்களும் இணைந்துகொள்கின்றோம் என்றார்.
(நன்றி : வீரகேசரி 29.08.2018)