மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றுமாலை மீட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார். அதன்போது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது குறித்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்கள் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மன்னார் நீதிமன்னத்தின் அனுமதியோடு நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் அகற்றியுள்ளனர். மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.