புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ் பொலிசாரால் கைதுசெய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர், இன்றுகாலை நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தனர். அதையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று, குறித்த சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது, கைதுசெய்ய முயற்சித்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைதுசெய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் குறித்த சட்டத்தரணியை, பொலிஸ்நிலையம் வந்து வாக்குமூலம் தருமாறுகோரி, அழைத்து சென்றனர்.