யாழ்ப்பாணம் வலிவடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் வலிவடக்கு பிரதேச செயலாளர் திரு.சிவஸ்ரீ தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், திறைசேரியின் மேலதிக ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், பரஞ்சோதி, வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது விழா மேடையில் வைத்து பயனாளிகள் பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் இங்கு சகல திணைக்களங்களும் ஒரு குடையின்கீழ் இணைந்து பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ்கள் என பல்வேறு சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார்கள். இதில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள்.