சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றுகாலை 10 மணிமுதல் 11 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே, நல்லாட்சி அரசே ஏமாற்றாதே, வாய்ப்பு பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா, நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு, நல்லாட்சி அரசே உயிர்களை கொல்லாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தமது விடுதலையை வலியுறுத்தி இன்று எட்டாவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.