மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டையிலுள்ள கச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காந்தி பூங்காவில் தான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மோகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ‘குறித்த தண்ணீர் தொழிற்சாலை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருவது மட்டக்களப்பு மாவட்டத்தின் அடிப்படை பிரச்சினையில் கை வைக்கப்பட்டுள்ள மிகவும் மோசமான செயற்பாடு ஆகும்.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் வரட்சி காலங்களில் குடி தண்ணீருக்கு மக்கள் நீண்ட தூரம் சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தண்ணீரை பெறவேண்டியுள்ளது. இந் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைக்கப்பட்டு தினமும் தண்ணீர் உறிஞ்சப்படுமாயின் எதிர்காலத்தில் மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் குடி தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பது என்பது மக்களை படுகுழியில் தள்ளும் செயற்பாடாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை செய்தும் அரசாங்கம் இது வரை மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்யக்காமல் செயற்பட்டு வருகின்றது.’ என்றார்

மேலும் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்களையும் புத்திஜீவிகளையும் பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் கட்சி மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பங்கு கொள்ள வருமாறு மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.