2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றில் ஆஜராகி குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி அதை 5 வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பிரதிவாதிகள் நால்வரும் இச் சம்பவம் தொடர்பில் கடந்த 10 வருடங்களுக்கு அதிகமான காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணிகளான லக்ஸ்மன் பெரேரா, ஹசித விபுலநாயக்க ஆகியோர் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த நீதிபதி பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 வருட சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு தீர்ப்பளிக்கபட்டவர்கள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான விஸ்வநாதன் ரமேஸ்குமார் எனப்படும் இப்பன், காளியம்மன் மனோஹரன் எனப்படும் மனோ, வேலு யோகராஜ் எனப்படும் சுதா, ராமநாதன் நதுதீபன் எனப்படும் தீபன் ஆகியோருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பிரதிவாதிகள் நால்வர் உள்ளிட்ட மேலும் இருவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், ஏனைய இருவரும் கைது செய்யப்படாததால், குறித்த இருவர் இல்லாமலே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.