வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, மாகாண ஆளுநர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டில், மாகாண சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்றது.இதில், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாணப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இருப்பினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதில் கலந்துகொண்டிருக்கவில்லை. மாகாண சபைகளின் நிதி மற்றும் பௌதீகவள முன்னேற்றம், வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இந்தக் கலந்துரையாடலின் போது பேசப்பட்டது. இதன்போது, கிராமிய மக்களின் வறுமையைப் போக்குவதற்கான நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, முதலமைச்சர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வறுமையை ஒழிப்பதற்கான முன்னெடுக்கப்பட்டுவ ரும் ‘கிராம சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கத்தை, உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு, அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது கட்டாயமென்றும், அவர் இதன்போது வலியுறுத்தினார். 2400 குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும், இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அப்பிரதேச மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அம்மக்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதிலும், ஜனாதிபதியின் தலையீட்டைப் பாராட்டிய மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பர் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.