எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன்பா.உ, திரு. த .சித்தார்த்தன் பாஉ, திரு. எம்ஏ.சுமந்திரன் பாஉ ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர்  ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.”