இலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்த நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி – அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மாற்றி, இம்மாதம் 14 ஆம் திகதி புதிய பிரதமர் ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – ஜனாதிபதி அரசியல் சட்ட அத்துமீறல்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை – மனித உரிமை மீறல்கள் – சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு ஹிட்லர் போல் செயற்பட்ட ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது.

இலங்கை தமிழர்கள் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ – இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி கொண்டு வரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தையும் தாண்டி, அதிக அதிகாரங்களை இலங்கை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை எள்ளி நகையாடிய ராஜபக்ஷவும் – சிறிசேனவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பா.ஜ.க. அரசு.
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடைபட்டு விட்டது.
அது மட்டுமின்றி தமிழர்கள் மீது திடீர் தேர்தலை, சிறிசேனா – ராஜபக்ஷ சூழ்ச்சிக் கூட்டணி திணித்திருப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்ததையும், தங்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் ஆபத்து உருவாகிய நேரத்தில் கூட இந்திய அரசு இப்படி இனம் புரியாத மௌனம் காத்ததையும் பார்த்து இலங்கை தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் – ஏன் உலகத்தமிழர்களும் இன்றைக்கு அதிர்ச்சியுடன் உறைந்து போயிருக்கிறார்கள்.

எனவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என பா. ம. க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதிய பாராளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரம் தான் என்றாலும் கூட, அதில் இந்தியாவின் பாதுகாப்பும், இலங்கை தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை என கூறி இந்திய அரசு கடந்து செல்ல முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை ஜனாதிபதி எந்தக் காரணமும் இல்லாமல் தான் பதவியிலிருந்து நீக்கம் செய்தார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் ராஜபக்ஷ அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன.

இலங்கை பாராளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு ஜனாதிபதி சிறிசேன சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயற்பட்டார். எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்.

இலங்கைப் போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை இதுவரை விடுவிக்காத ஆட்சியாளர்கள், இப்போது தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற முயற்சிகள் செய்தனர். ஆனால், எந்த முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், பாராளுமன்றத்தில் தோல்வியை தவிர்ப்பதற்காகத் தான் பாராளுமன்றத்தையே கலைக்க ஜனாதிபதி சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சிறிசேன அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் ஜனாதிபதி தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேன தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல. ஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது.

தமிழர்களையும், ராஜபக்ஷவுக்கு எதிரானவர்களையும் மிரட்டியும், முறைகேடுகள் செய்தும் தேர்தலில் வெற்றி பெற சிறிசேன – ராஜபக்ஷ கூட்டணி முயலும். அவ்வாறு நடந்தால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிரான செயல்களும் தீவிரமடையும்.

இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம்.

அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தும். இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரமசிங்க நீக்கப்பட்டு ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது.

இந்த விடயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.