கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்றுமாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன. நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 10 மணியளவில் வரை புயலின் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தினால் அவசர புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் 700 குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளன. விரிவான புள்ளிவிபரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.